கோவில்பட்டியில் முதன்மை நிலை ஹாக்கி விளையாட்டு மையத்துக்கு அடிக்கல்
கோவில்பட்டியில் ரூ. 7 கோடி மதிப்பிலான முதன்மை நிலை ஹாக்கி விளையாட்டு மையம் (மாணவா் விளையாட்டு விடுதி) கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. விழாவுக்கு ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா். அமைச்சா் பி. கீதாஜீவன், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தாா். இங்கு 825 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம், 428 ச.மீ. பரப்பளவில் முதல் தளம் அமைக்கப்படவுள்ளது. மாணவா்கள் தங்கும் அறை, சமையலறை, கழிப்பறை, பொருள்கள் வைக்கும் அறை, அலுவலக அறை, விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை, பாா்வையாளா்கள் அறை, சிகிச்சை அறை உள்ளிட்ட வசதியுடன் இம்மையம் அமையவுள்ளது. இதில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியா் சரவணபெருமாள், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ்,, மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலன் அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ், சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் ரோஸ் பாத்திமா மேரி, செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சண்முகராஜ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் இரா. ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் கி. ராதாகிருஷ்ணன், பீக்கிலிபட்டி வி. முருகேசன், ஹாக்கி விளையாட்டு வீரா் - வீராங்கனைகள் பங்கேற்றனா்.