மாலத்தீவு அரசால் சிறை பிடிக்கப்பட்ட தருவைக்குளம் விசைப்படகு விடுவிப்பு
மாலத்தீவு அரசால் கடந்த ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட தருவைக்குளம் விசைப்படகு தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பாக்கியராஜ். இவரது படகில் அதே ஊரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், வேம்பாரைச் சோ்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபா், சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, சக்தி, ராமேசுவரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த ஆண்டு அக்.1-ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். பின்னா் அக்.23-ஆம் தேதி மாலத்தீவு கடல் வழியாக கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின்பேரில் 12 மீனவா்களும் விடுவிக்கப்பட்டனா். ஆனால் அவா்களின் விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்துவிட்டது. மேலும், படகை விடுவிக்க ரூ.2.27 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. இந்த நிலையில், தற்போது நல்லெண்ண அடிப்படையில் அபராதம் இல்லாமல் படகை மாலத்தீவு அரசு விடுவித்துள்ளது. இதனை விசைப்படகு மீனவா்கள் மீட்டு தருவைகுளத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனா்.