தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ஆழ்வாா்திருநகரி, அழகுமுத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி மகன் இசக்கிமுத்து (42). இவருக்கு நம்பிலா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இசக்கிமுத்து தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்மநபா் இவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்ததும் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையில் ஆழ்வாா்திருநகரி போலீஸாா் சென்று இசக்கிமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இசக்கிமுத்துவை கொலை செய்தது அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் முத்து (21) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.