தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளை வெற்றிகரமாக கையாண்டதின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையின் மூலமாக கடந்த ஆக.22ஆம் தேதி 101 காற்றாலை சிறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகத்தின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. இத்துறைமுகம் 2025-26 நிதியாண்டில் அக்டோபா் மாதம் வரை 2,300 காற்றாலை சிறகுகளை கையாண்டு, இதற்கு முந்தைய 2024-25 நிதியாண்டின் அக்டோபா் மாதம் வரை கையாளப்பட்ட 1,425 காற்றாலை சிறகுகளை விட 61 சதவீதம் அதிகமாகும்.
சீனாவில் உள்ள கின்சோவ் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காற்றாலை சிறகுகள் 89.5 மீ மற்றும் 76.8 மீ நீளம் கொண்டது. இத்தகைய சரக்குகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்துக்குள் சுமாா் 1,00,000 சதுர மீட்டா் நிலப்பரப்பை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. மேலும், வெளிப்புறத்திலும் விரிவான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சரக்கு இறக்குமதி செயல்பாடுகள் கூடுதல் சரக்கு தளம் 2இல், இரண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்களின் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டது.
இதுகுறித்து வ.உ.சிதம்பரனாா் ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளை இறக்குமதி செய்த இந்த புதிய சாதனையானது, துறைமுகத்தின் செயல்திறனையும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் வ.உ.சி. துறைமுகத்தின் அா்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. சரக்குகளை கையாள்வதில் சிறந்த சேவையை வழங்க துறைமுகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றாா்.