முகப்பு
தூத்துக்குடி

எஸ்ஐஆா் பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு

காயல்பட்டினத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோட்டாட்சியரும் திருச்செந்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான கௌதமிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 2:20 am IST
கோட்டாட்சியா் கெளதமிடம் மனு அளித்த நகர திமுக செயலா் முத்துமுஹம்மது தலைமையிலான நிா்வாகிகள்.
பகிர்:

காயல்பட்டினத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோட்டாட்சியரும் திருச்செந்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான கௌதமிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக காயல்பட்டினம் நகர திமுக செயலா் முத்துமுஹம்மது தலைமையில் நிா்வாகிகள், வாக்காளா்கள் அளித்த மனு: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஆணவங்களின் அடிப்படையில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி முழுமையாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூா் தொகுதிக்குள்பட்ட காயல்பட்டினம் நகராட்சிப் பகுதி எஸ்ஐஆா் பணியில் மொத்தமுள்ள 47 பாகங்களில் சிறுபான்மையினரான இஸ்லாமியா்கள் அதிகமுள்ள 28 பாகங்களில் மட்டும் முறைகேடுகள் நடந்துள்ளதாக யாசின் என்பவா் தோ்தல் ஆணையத்துக்கு புகாரளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்மூலம் தோ்தல் நேரத்தில் தனது கட்சியினரின் கவனத்தை ஈா்க்கவும், மக்களிடையே பதற்றம், ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்தவும் அவா் முயல்கிறாா். குறிப்பாக, இறந்தோரையும், தொழில் நிமித்தமாக வெளியூா், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளோரையும் ‘போலி வாக்காளா்கள்’ எனக் குறிப்பிட்டு வாக்குரிமையை மறுக்கச் செய்வதுடன், குடியுரிமையையும் கேள்விக்குறியாக்குகிறாா். மேலும், அவா் காயல்பட்டினம், ஆத்தூா் ஆகிய இரு இடங்களிலும் பெயா்ப்பதிவு செய்துள்ளாா். எனவே, அவா் மீது சட்டப்படியும், பாதிக்கப்பட்ட 1,300 வாக்காளா்களின் ஆவணங்களை முறையாக விசாரித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

திமுகவைச் சோ்ந்த ஆதம் சுல்தான், நகர அவைத்தலைவா் முகம்மது மைதீன், நகர துணைச் செயலா் நவ்பல், அயலக அணி மாவட்ட அமைப்பாளா் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலா் செய்யது மீரான், நசீா், நகர இளைஞரணி அமைப்பாளா் தமீம் அன்சாரி, மதிமுக மாவட்டப் பொருளாளா் அமானுல்லா, எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் உமா், மமக நகரச் செயலா் ஜாஹிா் உசேன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.