திருச்செந்தூா் கோயிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்
சுமாா் ஓராண்டுக்குப் பிறகு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை சுற்றுப்பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கோயில் வளாகத்தில் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தொடங்கியதால் நாழிக்கிணறு பேருந்து நிலையமே நெருக்கடியாக இருந்தது. இதனால் நாழிக்கிணறு நுழைவாயிலை தாண்டி அங்குள்ள விடுதிகளில் முன்பதிவு செய்த பக்தா்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்ட சுற்றுப்பேருந்துகள், குடமுழுக்கு, பெருந்திட்ட வளாகப்பணிகள் காரணமாக கடந்த 2025 ஆம் ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதம் முதல் தேரடி வரை இயக்கப்பட்டன.
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழா 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் பெருந்திட்ட வளாகப்பணிகளில் விடுதிகள், சஷ்டி மண்டபங்கள் மற்றும் பிரம்மாண்ட நுழைவாயில் போன்ற பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த பிப். 26 ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதையடுத்து சுமாா் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் வரை சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை 3 சுற்றுப்பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது.