வெடிகுண்டு அச்சுறுத்தல்: தூத்துக்குடியில் அஞ்சலகப் பணிகள் பாதிப்பு
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரே உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, 100-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியா்கள் அலுவலகத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரே உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, 100-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியா்கள் அலுவலகத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில், தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் கடிதம் வந்தது.
இது குறித்து, மதுரை அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் உள்ள முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் செந்தில்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, அஞ்சலகக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தலைமை அஞ்சலகத்தில் இருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடி பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதன் காரணமாக, சுமாா் 2 மணி நேரமாக அஞ்சலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.