காவலர் பற்றாக்குறை: திணறும் மகளிர் காவல் நிலையம்
கரூர், ஆக.17: காவலர்கள் பற்றாக்குறையால் திணறும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர், பசுபதிப
கரூர், ஆக.17: காவலர்கள் பற்றாக்குறையால் திணறும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கரூர், பசுபதிபாளையம், வெள்ளியணை, வாங்கல், வெங்கமேடு, அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, மாயனூர், லாலாப்பேட்டை, தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய இடங்களில் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த 16 காவல் நிலையங்களும் சட்டம்-ஒழுங்கு, குற்றம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
மகளிர் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கரூர், குளித்தலையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. குடும்ப பிரச்னைகள் தொடர்பாக புகார் கொடுக்க வருவோருக்கு ஆலோசனை கூறி, அவர்களை மீண்டும் குடும்பத்துடன் இணைய வைப்பதே இந்தக் காவல் நிலையங்களின் பணி.
மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள் எடுத்த எடுப்பிலேயே வரதட்சிணை குற்றச்சாட்டையே தனது கணவர், அவரது குடும்பத்தார் மீது வீசுகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று ஆராய்ந்து, அதன் பிறகே வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை மகளிர் போலீஸôருக்கு உள்ளது. புகார் தெரிவித்தவுடன் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதன் மூலம் குடும்ப உறவு சிதைந்துவிடும் என்பதால், முதல் கட்ட விசாரணை நடத்துகின்றனர்.
கொடுக்கப்பட்ட புகார் உண்மை இல்லை எனத் தெரியவந்தால் இரு தரப்பினரிடமும் பேசி, சமரசம் செய்து வைக்கின்றனர். புகாரில் உண்மையிருந்தால், புகாருக்குள்ளானவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
தற்போது பெருகிவரும் விவாகரத்து சம்பந்தமான வழக்குகள் முதலில் காவல் நிலையங்களையே வந்தடைகின்றன. இவ்வாறான வழக்குகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்குத் தினமும் 5 என்ற கணக்கில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை விசாரிக்க முடியாமல் இங்குள்ள காவலர்கள் திணறி வருகின்றனர்.
கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஓர் ஆய்வாளர், 3 உதவி ஆய்வாளர்கள், 4 தலைமைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள் 4, இளம் நிலைக் காவலர்கள் 24 பேர் என மொத்தம் 36 பேர் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாகவோ என்னவோ, தற்போது 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், ஆய்வாளர் பதவி காலியாகவுள்ளது. 3 உதவி ஆய்வாளர்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மற்றொருவர் கரூருக்கு மாற்றப்பட்டும் பணியில் சேரவில்லை.
மற்ற வகையில் ஒரு தலைமைக் காவலரும், 2 முதல்நிலைக் காவலர்களும், ஓர் இளநிலைக் காவலர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் 3 பேர் இதரப் பணிகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆக, மொத்தம் 5 பேர் மட்டுமே கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் உள்ளனர். இதிலும், நீதிமன்றப் பணி, கணினிப் பணி என 2 பேர் சென்றுவிடுவதால், கவுன்சலிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் பணியிலிருக்கும் ஒரு சில காவலர்களே செய்ய வேண்டியுள்ளது.
இதனால், தொடர்ந்து பணியில் ஈடுபடும் பெண் காவலர்களும் சோர்வுக்குள்ளாவதுடன், அதிகப் பணிச்சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களும், குடும்பத்துடன் காவல் நிலையத்தின் முன் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
இந்தக் காவல் நிலையத்தின் கீழ் கரூர், பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, தென்னிலை, வாங்கல் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட 104 கிராமங்கள் வருகின்றன.
இந்தக் கிராமங்களில் மகளிர் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் அந்தந்த காவல் நிலையங்கள் வாயிலாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.
மேலும், குழந்தைகள், பெண்கள் உதவி மையமாகவும் இந்தக் காவல் நிலையமே செயல்படுகிறது. இதற்கான இலவச எண்களில் தொடர்பு கொள்ளும்போது பணியிலிருக்கும் காவலர்களே சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு தொடர் பணிச் சுமையால் அவதியுறும் காவலர்களை மன அழுத்தத்திலிருந்து காக்கவும், நீதிக்காக காவல் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்களின் அவலத்தைக் குறைக்கவும், இந்தக் காவல் நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்ட காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
மேலும், குடும்ப பிரச்னைகளால் காவல் நிலையத்திற்கு வருவோருக்கு ஆலோசனை
அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞரையும் மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பிரவீன்குமாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.