சாலையின் குறுகிய வளைவுகளில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படுமா?
ஆலங்குடி, மே 30: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்துக்குள்பட்ட வடகாடு சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் எதிர்
ஆலங்குடி, மே 30: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்துக்குள்பட்ட வடகாடு சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலங்குடி வட்டாரத்தில் ரயில் சேவை இல்லாததால், சாலைப் போக்குவரத்து மட்டுமே பிரதானம். இதனால், அடிக்கடி சாலை விபத்துகள் நேரிட்டன. இதைத்தொடர்ந்து, ஆலங்குடி- வடகாடு- பட்டுக்கோட்டை இடையேயும், வெட்டன்விடுதி- கறம்பக்குடி- பட்டுக்கோட்டை இடையேயும் இருவழிச் சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மரங்களும் அகற்றப்பட்டன.
இதையடுத்து, விபத்துகள் குறைந்த நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் முக்கியச் சாலையான வடகாடு சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இந்தச் சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகம்.
இந்தச் சாலையில் மேலாத்தூர், கீழாத்தூர் இடையேயான சுமார் 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும், ஏராளமான இணைப்புச் சாலைகளும் உள்ளன.
ஆனால், கொண்டை ஊசி வளைவு குறித்தோ, இணைப்புச் சாலைகள் குறித்தோ எந்தப் பகுதியிலும் எச்சரிக்கைப் பலகைகள் இல்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள காகித ஆலைப் பகுதியில் பாலப் பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கைப் பலகை இல்லாததால், அண்மையில் விபத்து நேரிட்டு ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு எச்சரிக்கைப் பலகை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த எச்சரிக்கைப் பலகை இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் கொண்டை ஊசி வளைவுகள், இணைப்புச் சாலைகள் வரும் பகுதியிலும், சாலை, பாலப் பணிகள் நடைபெறும் பகுதியிலும் இரவு நேரங்களிலும் ஒளிரும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும் என்பதே ஓட்டுநர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜசேகரன் கூறியது:
நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுமானப் பணியில் மட்டும் கவனம் கொள்ளாமல், சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.