முகப்பு
திருச்சி

சொந்த இடமிருந்தும் வாடகைக் கட்டடத்தில் செயல்படும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம்

திருத்துறைப்பூண்டி, அக். 20: சொந்த இடம் இருந்தும், அரசு ரூ.  35 லட்சம் நிதி ஒதுக்கியும், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:56 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி, அக். 20: சொந்த இடம் இருந்தும், அரசு ரூ.  35 லட்சம் நிதி ஒதுக்கியும், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கிளை சிறைச்சாலை, சார்நிலை கருவூலம், அரசு வேளாண்மைக் கிடங்கு, வட்ட வழங்கல் அலுவலகம் நீதிமன்றம் ஆகிய அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் கச்சேரி சாலையில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தன.

 இதனால், பொதுமக்கள் தங்களது அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் அலைச்சல், சிரமமின்றி செய்து கொள்ள வசதியாக இருந்தது.

 ஒட்டுக் கட்டடத்தில், காவல் ஆய்வாளர் அறை, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, பதிவேடுகள், ஆயுதங்கள் வைப்பறை, காவலர் ஓய்வு அறை ஆகிய அனைத்து வசதிகளுடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்தது திருத்துறைப்பூண்டி காவல் நிலையம். ஆனால், சிறிய அளவில் இருந்த பழுதுகள் சீர் செய்யப்படாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மன்னார்குடி சாலையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு மாத வாடகையாக அரசு சார்பில் ரூ.  13 ஆயிரத்து 612 வழங்கப்படுகிறது.

 தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்திற்கு அருகே தொழில் நிறுவனங்கள், பட்டறைகள் உள்ளதால் எப்போதும் இயந்திரங்களின் இரைச்சல் சப்தம் உள்ளது. இது காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையூறாக உள்ளது.

 ஓர் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 25 தலைமைக் காவலர்கள் 10 முதல் நிலைக் காவலர்கள் என உள்ள இந்த காவல் நிலையத்தில் அவர்கள் பணியாற்ற போதிய இட வசதியும் இங்கு இல்லை. இன்னும் 16 காவலர் பணியிடங்கள் வேறு காலியாக உள்ளன.

 இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் யாரும் அக்கறை செலுத்தவில்லை எனபது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

 இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகில் சீனிவாசராவ் மணிமண்டபத்திற்கு அருகே காவல் நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர், அந்த இடத்தில் போதிய வசதி இல்லை என்று காவல் நிலையத்தை அங்கு மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

 எனவே, காவல் நிலையம் ஏற்கெனவே இயங்கி வந்த வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே, பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களையும் சேர்த்து, கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் காவல் நிலையம் அங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →