''பால் கொள்முதல் விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை''
கரூர், டிச. 14: தமிழக அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலை உயர்வின் பலன், கரூரில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு கடந்த கடந்த மாதம் 18-ம் தேதி பால் விலையை உயர்த்
கரூர், டிச. 14: தமிழக அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலை உயர்வின் பலன், கரூரில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு கடந்த கடந்த மாதம் 18-ம் தேதி பால் விலையை உயர்த்தியது. லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு, பசுவின் பால் ரூ. 18-லிருந்து ரூ. 20 ஆகவும், எருமைப் பால் ரூ. 26 லிருந்து ரூ. 28 ஆகவும் ஆனது.
அதேபோல, பால் கொள்முதல் நிலையங்களில் பசுவின் பால் ரூ. 22-ல் இருந்து ரூ. 24 ஆகவும், எருமைப் பால் ரூ. 30-ல் இருந்து ரூ. 32 ஆகவும் உயர்ந்தது.
பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ. 30-ல் இருந்து ரூ. 34 வரை விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு, மாவட்டம் வாரியாக பால் உற்பத்தியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பால் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு ஆவின் நிர்வாகம் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
ஆனால், கரூர் மாவட்டத்தில் அரசால் உயர்த்தப்பட்ட பாலுக்கான கொள்முதல் விலை கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாலின் கொள்முதல் விலை உயர்ந்தும், கரூரில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தாமல், கடந்த முறை வழங்கிய தொகையே வழங்கப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களிடம் கேட்டால், தங்களுக்கு அரசிடமிருந்து எந்த விலைப் பட்டியலும் வரவில்லை எனக் கூறுகின்றனர் என்று விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆவின் நிர்வாகிகள் கூறியது:
கரூர் மாவட்டத்தில் 243 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 180 சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. சுமார் 32 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தோரணக்கல்பட்டியில் பால் குளிரூட்டும் நிலையமும், தரகம்பட்டி, தாளியாம்பட்டியில் தொகுப்பு பால் குளிர்விக்கும் நிலையமும் செயல்படுகின்றன. மஞ்சாநாயக்கன்பட்டியில் குளிர்விக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்திலிருந்து தினமும் 61 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, இவற்றில் 3 ஆயிரம் லிட்டர் அந்தந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விற்கப்படுகிறது. மீதமுள்ள 58 ஆயிரம் லிட்டர் குளிரூட்டும் நிலையத்தில் குளிரூட்டப்பட்டு, திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, பாலிலுள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையில்தான் பணம் வழங்கப்படுகிறது.
பசுவின் பாலில் 4.3 சதம் கொழுப்பும், இதரச் சத்துகள் 8.2 சதமும் இருக்க வேண்டும்.
எருமைப் பாலில் 7 சதம் கொழுப்பும், இதரச் சத்துகள் 8.8 சதமும் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசு உயர்த்திய ரூ. 2 வழங்கப்படும்.
குறிப்பிட்ட சதத்தைவிட கொழுப்புச் சத்து அதிகமானால், அதற்கேற்பவும் பிரிமியத் தொகை வழங்கப்படுகிறது. இது திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
பாலிலுள்ள சத்தை அறிந்து கொள்வதற்காக, கூட்டுறவுச் சங்கங்களில் (இ.எம்.டி.) எலக்ட்ரானிக்ஸ் மில்கோ டெஸ்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இதில், கொழுப்புச் சத்தின் அளவு, அதற்கான தொகை குறிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் அட்டையில் குறிக்கப்படும்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு சங்கமும் 10 நாள், 15 நாள்களுக்கு ஒருமுறை பணம் வழங்குகிறது. எனவே, விவசாயிகள் தாங்கள் வழங்கும் பாலைத் தரமாக வழங்கி, அரசு அறிவித்துள்ள கூடுதல் விலையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்.
ஆனால், அரசு அறிவித்துள்ள கூடுதல் தொகையை இதற்கு முன் அளித்துள்ள அடிப்படை விலையிலிருந்தே வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.