நடைப் பயிற்சிக்கு வசதி செய்து தரப்படுமா?
பொன்னமராவதி, ஜூலை 16: பொன்னமராவதி அமரகண்டான் குளத்தைச் சுற்றி நடைப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமரா
பொன்னமராவதி, ஜூலை 16: பொன்னமராவதி அமரகண்டான் குளத்தைச் சுற்றி நடைப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் உள்ளது அமரகண்டான் குளம். இந்தக் குளத்தின் அருகே பொன்னமராவதி பேருந்து நிலையம், காவல் நிலையம், சிவன் கோயில், பேரூராட்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ளன.
இந்தக் குளம் போதிய பராமரிப்பு இல்லாததால், குளத்தைச் சுற்றியுள்ள கடைகளில் இருந்து குப்பைகள் இந்தக் குளத்தில்தான் கொட்டப்படுகின்றன.
பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.
புதுக்கோட்டை புதுக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டு, அதைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, நடைப் பயிற்சி செல்ல சாலை அமைக்கப்பட்டதைப் போல, அமரகண்டான் குளத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிகாலை நடைப் பயிற்சி செல்வோர் கொன்னையூர் சாலையிலும், நெற்குப்பை சாலையிலும் செல்கின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மூ. கணேசன் கூறியது:
அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்பவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலையில் செல்வது ஆபத்தானது. எனவே, அமரகண்டான் குளத்தைச் சுற்றி சாலை அமைக்கப்பட்டால் பெண்கள், முதியவர்கள் நடைப் பயிற்சி மேற்கொள்வது எளிது.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.