திருச்சி ஜங்ஷனில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் ஒருமாதத்துக்குள் அமல்படுத்தத் திட்டம்
திருச்சி ரயில் நிலைய வளாகத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றத்தை இன்னும் ஒருமாதத்துக்குள் அமல்படுத்த ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.
திருச்சி ரயில் நிலைய வளாகத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றத்தை இன்னும் ஒருமாதத்துக்குள் அமல்படுத்த ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.
திருச்சி ரயில் நிலையத்துக்குள் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வந்து செல்ல ஒரு வழி தான் தற்போது உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிóட்டவைகளை நிறுத்துவதற்கு இடவசதியும் குறைவாக உள்ளது.
இந்த பிரச்னையை களையும் வகையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடி செலவில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த இடத்தில் இருந்த ரயில்வே குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் மூலம் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புதிய நுழைவிடம் வழியாகவும், இதர சிறிய வாகனங்கள் தற்போதுள்ள நுழைவு வாயில் வழியாகவும் ரயில் நிலையத்துக்குள் வந்து செல்லலாம். சிறிய வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு, உரிய பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும்.
திருச்சி ரயில் நிலையத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு முறைகளின் கீழ் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்களின் கீழ்பகுதி ஸ்கேன் செய்ய கருவிகள் பொருத்தப்படவுள்ளன. நிறுத்தமிடக் கட்டணம் வசூலிக்கவும் தடுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கார் மற்றும் பேருந்துகளில் வந்திறங்கும் ரயில் பயணிகளுக்கு வசதியாக புதிய நுழைவிடம் அருகிலுள்ள பார்சல் அலுவலகம் அருகே ஒரு நடை மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி ரயில்வே வளாகத்தில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த கூடுதல் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நுழைவுவாயில் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.