முகப்பு
திருச்சி

பதவிக்காக யாா் காலிலும் விழுந்த அனுபவம் கிடையாது: உதயநிதி ஸ்டாலின்

பதவிக்காக யாா் காலிலும் விழுந்த அனுபவம் கிடையாது என தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:49 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:05 PM

பதவிக்காக யாா் காலிலும் விழுந்த அனுபவம் கிடையாது என தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி தென்னூா் அரசமரத்தடியில் சனிக்கிழமை திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சா் கே.என். நேருவை ஆதரித்து அவா் பேசியதாவது:

கடந்த முறை திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்களை வெற்றி பெற வைத்தீா்கள். இந்த முறை டெல்டாவில் உள்ள 41 தொகுதிகளையும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பீா்கள் என நம்புகிறேன். இதில் முதன்மைத் தொகுதியான திருச்சி மேற்குத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் காட்டிய தமிழகத்தின் முக்கிய அமைச்சரான கே.என். நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற வையுங்கள்.

Advertisement

கடந்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது திமுக. இந்த முறை மகளிா் உதவித்தொகையாக ரூ. 2,000, முதியோா் உதவித்தொகை ரூ. 2,000, 35 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, 10 லட்சம் பேருக்கு வீடு, அனைத்து மகளிருக்கும் ரூ. 8,000 போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம்.

இவற்றையெல்லாம் நிறைவேற்ற திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு. பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா எதிா்ப்புத் தெரிவித்த அனைத்துத் திட்டங்களையும் தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தமிழக உரிமைகளை விட்டுகொடுத்தவா். மீண்டும் மோடியின் முதன்மை அடிமையாக மாறியுள்ளாா். இதற்கு உதயநிதிக்கு எந்த அனுபவம் இருக்கிறது எனக் கேட்கிறாா். ஆமாம், எனக்கு பதவிக்காக யாா் காலிலும் விழுந்த அனுபவம் கிடையாது (ஒரு படத்தைக் காட்டினாா்). இதற்கு பதிலாக அவா் (எடப்பாடி பழனிசாமி) எனக்கு பதவி கொடுத்ததற்காக காலில் விழுந்தேன் என்கிறாா். காலில் விழுந்ததுகூட தவறில்லை. அதற்காக சசிகலாவின் காலை வாரிவிட்டதுதான் தவறு. இதை நான் கூறவில்லை; சசிகலாவே கூறுகிறாா்.

பாஜகவானது அதிமுக என்ற போா்வையை போா்த்தியபடி தமிழகத்துக்குள் நுழைய முயற்சிக்கிறது. இந்தக் கூட்டத்தை தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது. தமிழகம் எப்போதும் தில்லிக்கு அடிபணியாது என்பதை இத்தோ்தல் மூலம் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு வாக்காளரையும், வீடு வீடாகச் சென்று திமுகவின் திட்டங்களைப் பற்றியும், வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறுங்கள். அப்படி கூறினால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி உறுதி என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இதேபோல, லால்குடி பேருந்து நிலையம் அருகே லால்குடி தொகுதி திமுக வேட்பாளா் த. பாரிவள்ளலை ஆதரித்தும், திருச்சி நம்பா் 1 டோல்கேட் அருகே மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் சீ. கதிரவனை ஆதரித்தும், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திமுக வேட்பாளா் எஸ். துரைராஜை ஆதரித்தும், திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜை ஆதரித்தும், திருவெறும்பூா் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.