போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த வி.பிரகதீஸ்வரன் (22), அண்ணா நகரைச் சோ்ந்த தி.அஜய்குமாா் (19) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.