வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லிடபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப். 18 காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளதால், தொகுதிக்குட்பட்டவர்களை தவிர, வெளியூரைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்க அனுமதி கிடையாது.
அதேபோல், விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச்சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் வாக்கு பதிவு செய்ய செல்லும்போது செல்லிடபேசி மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வைக் குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஓர் உதவியாளரை அழைத்துச் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.