முகப்பு
அரியலூர்

சொத்துப் பிரச்னை காரணமாக விவசாயி கொலையா? மகன்களிடம் காவல்துறையினர் விசாரணை

சொத்துப் பிரச்னை காரணமாக தந்தையை மகன்கள் கொலை செய்தார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

சொத்துப் பிரச்னை காரணமாக தந்தையை மகன்கள் கொலை செய்தார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(90). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனபாக்கியம், 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். முதல் மனைவிக்கு தனவேல்(52), தர்மராஜ்(50) என இரண்டு மகன்கள். 

இதில், தனவேல் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம்(78) இவருக்கு தங்கமணி(50) என்ற மகன் உள்ளார். இவர்களுக்குள் சொத்து தகராறு காரணமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மனைவியின் மகன் தங்கமணி வழக்கு நடந்து வரும் நிலத்தில் உழுது கொண்டிருந்துள்ளார். 

அப்போது அங்கு சென்ற முதல் மனைவியின் மகன் தர்மராஜ், தங்கமணியிடம் சொத்து சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் எனக்கும் பங்கு உண்டு, நீ மட்டும் உழுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சாமிநாதன் தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் யார் கொலை செய்தனர் என தெரியாததால், சாமிநாதனின் 2-வது மனைவி பஞ்சவர்ணம் மகன் தங்கமணி, மருமகள் சாந்தி மற்றும் முதல் மனைவியின் மகன் தர்மராஜ், அவரது மகன் குஞ்சிதபாதம்(36) ஆகியோரை காவல்துறையிர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஜயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →