அரியலூரில் நாட்டுக்கோழி வளா்க்க ஆா்முள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் நவம்பா் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் நவம்பா் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 15 பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
ஒவ்வொரு பயனாளிக்கும், ஒரு நாள் வயதுடைய நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 1,000 வாங்குவதற்கான தொகையில் 50 சதவீதம் மானியத்தொகை ரூ.15,000, ஒரு மாதத்துக்கு கோழித் தீவனம் வாங்குவதற்கான தொகையில் 50 சதவீதம் மானியத்தொகை ரூ.22,500 மற்றும் கோழிக்குஞ்சு பொறிப்பான் வாங்குவதற்கான அதிகபட்சத் தொகை ரூ.75,000-ல் 50 சதவீதம் மானியத் தொகை ரூ.37,500 வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளியாவதற்கான தகுதிகள் குறைந்தது 2,500 சதுர அடி (ஒரு கோழிக் குஞ்சுக்கு 2.5 சதுர அடி வீதம்) அளவுள்ள கோழிக் கொட்டகை வைத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக, மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் கோழிப் பண்ணையை நடத்துபவராக இருத்தல் வேண்டும்.
தோ்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா் தோ்வு செய்யப்படுவா். விதவை, ஆதரவற்றோா், மூன்றாம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் 27.11.2020-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.