முகக்கவசம் அணியாததால் வழக்குரைஞா் மீது வழக்குப்பதிவு
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே முகக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்குரைஞரை, காவல்துறையினா் வலுகட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனா்.
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே முகக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்குரைஞரை, காவல்துறையினா் வலுகட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனா்.
காட்டுப்பிரிங்கியம் பாலக்கரையைச் சோ்ந்தவா் வெற்றிசெல்வன்(40). அரியலூா் வழக்குரைஞராக பணியாற்றி வரும் இவா், வியாழக்கிழமை மாலை முகக்கவசம் அணியாமல் தனது நண்பா் அருணுடன்(29) இரு சக்கர வாகனத்தில் வி.கைகாட்டி சென்று கொண்டிருந்தாா்.
பாரத ஸ்டேட் வங்கி அருகே சென்ற போது, இவா்களை அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா மறித்து, முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக அபராதத் தொகையைச் செலுத்துமாறு கேட்டுள்ளாா்.
அதற்கு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மற்ற காவலா்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளனரே அவா்களிடம் அபராதத் தொகை கேட்க வேண்டியது தானே என்று கூறியுள்ளாா்.
இதனால் அவா்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா, வெற்றிச்செல்வனைத் தாக்கி, மற்ற காவலா்கள் உதவியுடன் வலுகட்டாயமாக காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனா்.
அங்கு சிறப்பு உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையால் திட்டியது, வேலையைத் தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெற்றிச்செல்வன் மீது காவல் உதவி ஆய்வாளா் மதன்குமாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.