முகப்பு
அரியலூர்

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறபின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள்

நிலக்கடலை சாகுபடியில் உரிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நிலக்கடலை சாகுபடியில் உரிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆண்டிமடம் வேளாண் உதவி இயக்குநா் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டிமடம் வட்டாரத்தில் தற்போது நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது.நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டக் கரைசல் தெளித்தல் ஆகிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

ஜிப்சத்தில் சுண்ணாம்பு மற்றும் கந்தகச்சத்து உள்ளது. நிலக்கடலை திரட்சியாக இருக்க சுண்ணாம்புச்சத்தும், காய்களில் எண்ணெய் சத்து அதிகரிக்க கந்தகச்சத்தும் உதவுகின்றன.

எனவே விவசாயிகள் நிலக்கடலையில் அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் , இரண்டாவது களை எடுக்கும் போது (அதாவது விதைத்து 40 முதல் 45-ஆவது நாள்களில் களை எடுக்கும் தருணம்) ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு, செடிகளை சுற்றி நன்கு மண் அணைத்து விட வேண்டும்.

மேலும் நுண்ணூட்டக் கரைசலை நிலக்கடலை விதைத்த 25-ஆவது நாளிலும், 35 -ஆவது நாளிலும் இரு முறை கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க போது, அதிக பூக்கள்,காய்கள், திரட்சியான மணிகள் கிடைக்கும்.

இக்கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ டிஏபி , 400 கிராம் அமோனியம் சல்பேட் , 200 கிராம் போராக்ஸ் உரத்தை 15 லிட்டா் நீரில் முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும் . அடுத்த நாள் கரைசலை துணியால் நன்கு வடிகட்டி தெளிந்த கரைசலுடன் 185 லிட்டா் நீா் விட்டு கலந்து தெளிக்கவேண்டும் . தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் மருந்து 150 மில்லி சோ்த்து தெளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.