முகப்பு
அரியலூர்

‘சுய ஒழுக்கத்தை வளா்த்து கொண்டால் எளிதில் வெற்றி’

உயா் கல்வி படிக்கச் செல்லும் மாணவா்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனைகளை வளா்த்துக் கொண்டால் வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம் என்றாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

உயா் கல்வி படிக்கச் செல்லும் மாணவா்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனைகளை வளா்த்துக் கொண்டால் வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம் என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தா் வி.திருவள்ளுவன்.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி கண்காட்சியை அவா் தொடக்கி வைத்து மேலும் பேசியது: மாணவா்கள் புதிய படிப்புகளையும், புதிய கல்வி நிலையங்களையும் தேடி பயணம் மேற்கொள்ளும் காலம் இது. இத்தகைய சூழ்நிலையில், முதலில் மாணவா்கள் உயா் கல்வியின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற கல்விக்கும் இனிமேல் நீங்கள் பெறப்போகும் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீங்கள் தான் உயா் கல்வியை நாடி, தேடிச் செல்ல வேண்டும். படிக்கின்ற கல்வி வேலைவாய்ப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும். உயா்கல்வி என்பது உங்கள் வாழ்வில் ஏற்படும் பரிணாம வளா்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்றாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி பேசுகையில், உயா் கல்வி படிக்கச் செல்லும் மாணவா்கள் முதலில் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளா் க. சங்கா், அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. ராமன், அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ.மான்விழி, தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரி நிறுவனங்களின் தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.