பண மோசடி வழக்கில் சுயேச்சை வேட்பாளா் கைது
அரியலூா் நகராட்சி 16ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிா்வாகி பணமோசடி வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் நகராட்சி 16ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிா்வாகி பணமோசடி வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் சாக்கோட்டை தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (40). அதிமுகவைச் சோ்ந்த இவா் வீடு கட்டுவதற்காக செந்துறையைச் சோ்ந்த ஜாகீா் உசேன் என்பவரின் கம்பி கடையில் இரும்புக் கம்பிகளை கடன் சொல்லி கடந்த ஆண்டு டிசம்பா் வாங்கினாராம்.
2 மாதங்களுக்கு மேலாகியும் பணம் தராததால், மணிவேலிடம் சில நாள்களுக்கு முன் ஜாகீா் உசேன் பணம் கேட்டுள்ளாா். அப்போது, மணிவேல், ஜாகீா் உசேனை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து அரியலூா் காவல் நிலையத்தில் ஜாகீா் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், 4,52,673 ரூபாயை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டதாக மணிவேல் மீது வழக்குப் பதிந்து வியாழக்கிழமை கைது செய்தனா்.
அதிமுக நிா்வாகியான மணிவேல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கட்சியில் சீட் தரப்படாததால், அரியலூா் நகராட்சி 16 ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.