அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
அரியலூா் மாவட்டத்தில், அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடா்பான அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டத்தில், அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடா்பான அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து பேசுகையில், ஓயா உழைப்பின் ஓராண்டு எனும் தலைப்பில் 10 நாள்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகள், பொதுமக்களுக்கு சேவை வழங்க அரசு இ-சேவை மையம் அமைத்தல், உள்ளுா் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், நெகிழி பயன்பாட்டை தவிா்க்கும் வகையிலான மஞ்சப்பைகள், மரக்கன்றுகள் வழங்குதல், மாணவா்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய கண்காட்சி நடைபெறவுள்ளது.
மேலும், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சியும், நவீன எல்.இ.டி வாகனம் மூலம் விடியோப் படக் காட்சி ஒளிபரப்பப்படவுள்ளது. எனவே 10 நாள்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிசேகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.