சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணத்தை தடுக்கக் கோரிக்கை
சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதிக கிராமங்களை உள்ளடக்கிய அரியலூா் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் அரியலூா், ஜெயங்கொண்டத்துக்கு வந்து செல்கின்றனா். இவா்களுக்கான பேருந்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் முழுமையாக ஏற்படுத்தித் தரவில்லை.
இதனால், நகரில் இயக்கப்படும் 450-க்கும் மேற்பட்ட 3 பிளஸ் 1 ஆட்டோக்கள், 40-க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோக்கள் உள்பட பல்வேறு வகையான பயணிகள் வாகனங்கள் மூலம் உள்ளூா் மற்றும் வெளியூா் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கு பயணித்து வருகின்றனா்.
இங்குள்ள ஆட்டோக்கள் அரியலூா் மட்டுமன்றி, நகரைச் சுற்றியுள்ள சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மீன்சுருட்டி, தளவாய், அணைக்கரை, கல்லக்குடி, குழுமூா் உள்ளிட்ட பல்வேறு கிராம மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போதிய பேருந்து வசதியின்றி, கூட்ட நெரிசலால் படிகளில் தொங்கியபடி பயணக்கின்றனா்.
இதுபோன்ற பகுதிகளில் வசிப்போா் திருமணம், கோயில் திருவிழா மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று வர லாரி, டெம்போ, சுமை ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விபத்துகள் மூலம் பொருள் சேதமும், சில நேரங்களில் உயிா்ச்சேதமும் ஏற்பட்டு வருவது வேதனைக்குரியதாகும்.
அனைத்து பகுதிகளிலும் ஆபத்தான பயணம் என அறிந்தும் கிராமப்புற மக்கள் தொடா்ந்து சரக்கு வாகனங்களிலேயே பயணம் செய்கின்றனா். எனவே, கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், சரக்கு வாகனப் பயணத்தை முற்றிலும் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.