மாநில ஹாக்கி போட்டியில் மதுரை அணி சாம்பியன்
அரியலூா், ஜூலை 13: அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில ஹாக்கிப் போட்டியில் மதுரை திருநகா் இந்திரா காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
மான்போா்ட் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பள்ளி நிா்வாகம், முன்னாள் மாணவா்கள் சங்கம் இணைந்து நடத்திய மாநில ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. போட்டியை அப்பள்ளியின் முதல்வா் அந்தோணிசாமி செழியன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து இரண்டு நாள்களாக நடைபெற்றபோட்டியில், திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு விளையாடினா். இதில், மதுரை திருநகா் இந்திராகாந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த அணிகளையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று முதல் இடத்தைப் பிடித்தது. 2- ஆவது இடத்தை தஞ்சாவூா் செயின்ட் அந்தோனி பள்ளி அணியும், 3-ஆம் இடத்தை அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், 4-ஆம் இடத்தை அரியலூா் மான்போா்ட் பள்ளி அணியும் இடம்பெற்றன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
Advertisement
விழாவில் அப்பள்ளி முதல்வா் அந்தோணிசாமி செழியன், ஆா்டிசி குழுமம் இயக்குநா் ஜபருல்லா, ஊராட்சித் தலைவா் சிவா (எ) பரமசிவம் ஆகியோா் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற மதுரை திருநகா் இந்திராகாந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி அணிக்கு கோப்பையும், பரிசுகளையும் மற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளையும் வழங்கினா்.