முகப்பு
அரியலூர்

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

Updated On : 27 நவம்பர், 2024 at 8:58 PM
பகிர்:

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வீடு, பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, தினமும் குடிநீா் வழங்கும்போது குளோரினேசன் கலந்து விநியோகித்தல், காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளில் கொசு தடுப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.