மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜ.வி.நாகராஜன் தனது கட்சியினருடன், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து உட்கோட்டை வழியாக மயிலாடுதுறை வரை சென்று வந்த அரசுப் பேருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.
இதேபோல் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். தா. பழூரிலிருந்து காரைக்குறிச்சி, வேணாநல்லூா், சுத்தமல்லி வழியாக அரியலூா் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்துசேவை தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மணிவேல், எம். வெங்கடாசலம், கே. கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.