அரவக்குறிச்சி அருகே வேன்- தனியார் பேருந்து மோதி 16 ஆடுகள் சாவு, 3 பேர் காயம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடுகள் ஏற்றி வந்த வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 16 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடுகள் ஏற்றி வந்த வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 16 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் விபத்தில் ஆட்டு வியாபாரிகள் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் குட்டிராஜ் (43). ஆட்டு வியாபாரி. இவர், கயத்தாறு ஆத்திக்குளத்தைச் சேர்ந்த வெயில்முத்து மகன் சுடலை (25), கோவில்பட்டி மந்தித்தோப்பு அய்யனார் மகன் மணிவண்ணன்(22) ஆகியோருடன் வேனில் சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சனிக்கிழமை காலை சென்று அங்கு 70 ஆடுகள் வாங்கிக் கொண்டு கோவில்பட்டி திரும்பியுள்ளார். வேனை சுடலை ஓட்டியுள்ளார். இந்நிலையில், இரவு 10 மணியளவில் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து வேன் மீது மோதியுள்ளது. இதில், வேனுக்குள் இருந்த 70 ஆடுகளில் 16 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மேலும், வேன் ஓட்டுநர் சுடலை உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மலைக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் மணியன்குழி பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன்(46) என்பவரைத் தேடி வருகின்றனர்.