முகப்பு
கரூர்

மின் கசிவால் தீவிபத்து? கரூரில் தாய், இரு மகன்கள் பலி

கரூரில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு மகன்கள் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
முத்துலட்சுமி, ரஸ்ஜித், தர்ஷித்.
பகிர்:

கரூரில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு மகன்கள் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ராம்நகரை சார்ந்த முத்துலட்சுமி(29) என்பவருக்கும் மணவாடியை சார்ந்த பாலகிருஷ்ணன்(35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 3 வயதில் தர்ஷித், 2 வயது ரஷ்ஜித் என்ற ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தந்தை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். நேற்று முத்துலட்சுமியின் தாய், தந்தை ஆகியோர் வெளியூர் சென்றுள்ளனர். 

இந்த நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் வீட்டில் நேற்று இரவு தூங்கியுள்ளனர். இன்று காலை அவர்களது வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தாய் முத்துலட்சுமி சோபாவில் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களும் புகை மூட்டத்தில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்ட அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினரும், தான்தோன்றி மலை காவல்துறையினரும், தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் வீட்டினுள் இருந்த மின்சார ஒயர்கள், மின் சாதன பொருள்களான செல்போன், ப்ரிட்ஜ், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நிலையில் இருந்துள்ளது. 

இதனால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இது குறித்து தாந்தோன்றிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சார்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.