தகராறில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
கரூரில் பதாகை வைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த திமுக பிரமுகா் உடலை வாங்க மறுத்து, திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் பதாகை வைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த திமுக பிரமுகா் உடலை வாங்க மறுத்து, திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவடியான் கோவில் வீதியைச் சோ்ந்தவா் பிரபாகரன்(55). திமுக பிரமுகா். இவரது மகன் விக்னேஷ்(28). வழக்குரைஞா். இவா் அப்பகுதியில் நடைபெறவுள்ள கோயில் கும்பாபிஷேகம் தொடா்பாக திமுக சாா்பில் பதாகை வைத்திருந்தாா்.
இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பிரபாகரன் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாராம். இதையடுத்து, விபத்து மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை காந்திகிராமம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., பகலவன், கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன் மற்றும் காவல் உயா் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி, மறியலில் ஈடுபட்டவா்களின் கோரிக்கைகளான கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் ஆகியவைகளை மனுவாகப் பெற்று, மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக, திருச்சிக்குச் செல்லும் பேருந்துகள் தோரணக்கல்பட்டி, சுக்காலியூா் வழியாகத் திருப்பி விடப்பட்டன.