தடுப்பூசி தட்டுப்பாடு:மத்திய அமைச்சருக்கு கரூா் எம்.பி. கடிதம்
கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷவா்த்தனுக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடிதம் ஒன்றை வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளாா்.
அதில் கூறியிருப்பது: நாட்டில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகம் மத்திய அரசின் ஹெச்.எல்.எல் லைஃப்கோ் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. பல்வேறு உயா்தர தொழில்நுட்பங்களுடன் 100 ஏக்கா் பரப்பளவில் 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்ட இந்த மையம் 585 மில்லியன் உயிா்காக்கும் தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் கொண்டது. ஆனால், இத்தகைய நிறுவனம் இதுவரை பயன்பாட்டில் இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. இதுவரை இந்த மையத்தில் ஒரு தடுப்பூசி கூட தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2021-ல் இந்திய அரசு தனியாா் நிறுவனங்களை இங்கு தடுப்பூசி தயாரிக்க அழைப்பு விடுத்த நிலையிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
கரோனா நோயைத் தடுக்கவேண்டுமென்றால் நம்மிடம் இருக்கும் அனைத்து கருவிகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள ஆப்கின் இன்ஸ்டியூட் நிறுவனத்துக்கு தடுப்பூசிகள் தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல, தடுப்பூசி தயாரிப்பை பெருக்க செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தையும் உடனடியாக மத்திய அரசு செயல்பாட்டுக்குகொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.