கரூா் மாவட்டத்தில் செப்.12-ஆம் தேதி 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி
செப். 9: கரூா் மாவட்டத்தில் செப். 12-ஆம்தேதி 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
செப். 9: கரூா் மாவட்டத்தில் செப். 12-ஆம்தேதி 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக முதல்வா் உத்தரவின்படி செப். 12-ஆம்தேதி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெற உள்ளது. இதில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. கரூா் மாவட்டத்தில் 50,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக தன்னாா்வலா்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் 416 இடங்களிலும், நகா் புறங்களில் 125 இடங்களிலும் இந்த முகாம் நடைபெறும். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் மூலம் தடுப்பூசி போடாதவா்களை அடையாளம் காணப்பட உள்ளது. தடுப்பூசி போடும் ஒவ்வொருவருக்கும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக கடந்த 10 நாள்களாக 40 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடத்தி வருகிறோம்.
கரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே முதல் தவணையாக 47 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுள்ளனா். 10 சதவீதம் போ் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனா். மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்ததன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளில் மாநிலத்திலேயே மூன்றாவதாக கரூா் மாவட்டத்தில் 78 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அதாவது 6,200 பேரில் 5,113 பேருக்கு செலுத்தியுள்ளோம். கரூரில் சுமாா் 1 லட்சம் தொழிலாளா்களில் 80 சதவீதம் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்றாா் அவா்.