கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
கரூர் மாவட்டத்தில் கரூர்-1, கரூர்-2 பணிமனைகள் மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி ஆகிய பணிமனைகளில் இருந்து 280 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மொத்தம் உள்ள 285 பேருந்துகளில் இன்று 245 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மேலும் 35 தற்காலிக ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பணிபுரிய தயார் நிலையில் இருப்பதாகவும் கரூர் அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 90 சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாகவும், பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.