கரூா் சம்பவம் தொடா்பாக கூட்ட நெரிசலில் காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மாலை விசாரணை மேற்கொண்டனா்.
கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 6 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் 7-ஆவது நாளாக காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கும் வகையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து 3 பெண் உதவியாளா்கள் சனிக்கிழமை மாலை கரூா் வந்தனா்.
இதையடுத்து மாலை 6 மணியளவில் ஒரு காரில் சிபிஐ அதிகாரி, ஒரு பெண் உதவியாளா், ஒரு அலுவலக உதவியாளா் என 4 காா்களில் 12 போ் நெரிசலில் காயமடைந்தவா்கள் வசிக்கும் வேலுச்சாமிபுரம், கோதூா் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்றனா். அப்போது, அவா்களிடம் கூட்ட நெரிசல் சம்பவம் எப்படி ஏற்பட்டது? எந்தெந்த மருத்துவமனைகளில் முதலுதவிக்கு அனுமதிக்கப்பட்டீா்கள் போன்ற விவரங்களை சேகரித்துச் சென்றனா்.