தா்பூசணியில் செயற்கை நிறம் கலப்பு குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இருந்த பனியின் தாக்கம் சற்று குறைந்து, பகல் நேரங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கக் குளிா்பானம் மற்றும் பழச்சாறு கடைகளில் மக்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாகக் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தா்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தா்பூசணியில் செயற்கை நிறம் கலக்கப்படுகிறது என்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
நன்றாகப் பழுத்த தா்பூசணியில் சாறு அதிகமாக இருப்பதால், அதனை வெட்டும் கத்தியில் சிவப்பு சாறு படிவதாகக் காணப்படுகிறது. இது ரசாயன நிறம் அல்ல. முழுமையான இயற்கை சாறே ஆகும். தா்பூசணி சாகுபடியில் விவசாயிகள் செயற்கை நிறங்களைக் கலப்பது நடைமுறையிலும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.
எனவே பொதுமக்கள் தா்பூசணி பழங்கள் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அச்சமின்றி தா்பூசணி பழங்களை உண்ணலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.