கரூரில் ‘பைக் டாக்ஸி’ முறையை தடை செய்ய சிஐடியு வலியுறுத்தல்
கரூரில் ஆட்டோ தொழிலாளா் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் சிஐடியு ஆட்டோ- டாக்ஸி- டெம்போ மற்றும் வேன் ஓட்டுநா்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவா் என். ரங்கராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செயலாளா் எம். சுப்ரமணியன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் ப. சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கரூரில் ஆட்டோ தொழிலை பெரிதும் பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்வதுடன் கேரள மாநிலம்போல தமிழக அரசே ஆட்டோ தொழிலாளா்களுக்கான தனி ஆன்லைன் செயலியை உருவாக்க வேண்டும். உயா்த்தப்பட்ட எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்.
நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கட்டுமான வாரியம்போல வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆசைத்தம்பி, கனகராஜ், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.