வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 14 பேர் காயம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து, வாடிவாசல் வழியாக 330 காளைகள் திறந்துவிடப்பட்டன. காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது. முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
பார்வையாளர்கள் உள்பட 14 பேர் காயம்: இதில், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற விசுவக்குடியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மகன் முஹமது ஆசிப் (21), அன்னமங்கலத்தை சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஜான் (30), செல்வம் மகன் வைரமணி (25), பூலாம்பாடியைச் சேர்ந்த ஆசைகுமார் மகன் சசிக்குமார் (26), தொண்டமாந்துறையை சேர்ந்த கணபதி மகன் சக்தி (21), சேலம் மாவட்டம், கெங்கல்லியை சேர்ந்த மணிபாரதி (21), பார்வையாளர்களான திருச்சி மாவட்டம், இருங்களூரைச் சேர்ந்த சிங்கராயர் மகன் ஜோசப் (23), பூலாம்பாடியை சேர்ந்த ரவி மகன் ராஜேஷ் (25) உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.