பெரம்பலூர், அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு வழக்குகளை கையாளுவது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். ஒய்வு பெற்ற நீதிபதி சின்னையன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார். வழக்குகளைப் பதிவு செய்யும் முறைகள், எந்தெந்த சட்டப்
பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்வது, அதற்குத் தேவையான ஆவணங்கள் திரட்டல், உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து வெளியே வராத வகையில் நீதிமன்றங்களில் ஆவணங்களை சமர்ப்பித்தல், வழக்கு விசாரணை மேற்கொள்ளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், துணைக் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், தேவராஜன், ஆறுமுகம், அழகுதுரை உள்பட பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர்.