மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவை தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, பெரம்பலூரில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்பை திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதையடுத்து, அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், தொண்டர்கள் புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர் ரெங்காஸ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், ஒன்றியத் தலைவர்கள் குமார், செந்தில்குமார், ரகுபதி, காமராஜ், நகர நிர்வாகிகள் அழகுவேல், பொற்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.