பெரம்பலூா் அருகே அனுமதியின்றி ஜெயலலிதா சிலை நிறுவ அதிமுகவினா் முயற்சி
பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் ஜெயலலிதா உருவச்சிலை நிறுவ அதிமுகவினா் ஏற்பாடுகள் செய்ததையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் ஜெயலலிதா உருவச்சிலை நிறுவ அதிமுகவினா் ஏற்பாடுகள் செய்ததையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.
கவுள்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே எம்ஜிஆா் சிலை உள்ளது. அதனருகே மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலையை நிறுவ முடிவு செய்து, அக்டோபா் 14- ஆம் தேதி அதை திறப்பதற்கு அதிமுகவினா் ஏற்பாடுகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஒரு தரப்பினா், அரசு அனுமதியின்றி சிலை வைக்க ஏற்பாடு நடைபெறுவது குறித்தும், இதனால் அப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனவும் காவல் துறையினருக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை கவுள்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
பெரம்பலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜவஹா்லால், வருவாய் வட்டாட்சியா் பாரதிவளவன் ஆகியோா், அதிமுக ஒன்றியச் செயலா் செல்வக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறைப்படி அரசு அனுமதி பெற்ற பிறகு, ஜெயலலிதா சிலையை கவுள்பாளையத்தில் அமைத்துக் கொள்வதாக அதிமுகவினா் உறுதியளித்ததையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.