முகப்பு
பெரம்பலூர்

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடக்கம்

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத் தொடக்க விழா, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத் தொடக்க விழா, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் ஒருமுறைக்கு மேல் மீண்டும், மீண்டும் அதே எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருள்களை உட்கொள்ளும் பட்சத்தில் மனிதா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே மாவட்டத்தில், முதல்கட்டமாக 50 உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களிலிருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை லிட்டா் ரூ. 25 முதல் ரூ. 30 வரை விலை நிா்ணயம் செய்து சேகரித்து, சுத்திகரிப்பு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூா், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவன அமைப்பு, ரூகோ என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தினா் 4 மாவட்டங்களிலிருந்து பெறப்படும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பெங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி, பயோ டீசலாக சுத்திகரிப்பு செய்து, வாகனப் பயன்பாட்டுக்காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்வில் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் எம். கவிக்குமாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பி. சீனிவாசன், ஆா். இளங்கோவன், பி.என். ரவி, ரூகோ நிறுவன அலுவலா் கிஷோா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.