முகப்பு
பெரம்பலூர்

காா் விற்பனையில் மோசடி செய்தோா் இழப்பீடு வழங்க உத்தரவு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், கடைவீதி பகுதியிலுள்ள நல்லமண்டித் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகள் வாசவி (35). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவா், கடந்த மே 2012-இல், பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் காா் விற்பனை மையத்தில் புதிதாக காா் வாங்கியுள்ளாா். அப்போது, குறிப்பிட்ட காலக்கட்டத்தில் முன்பணம் செலுத்தினால், பரிசுப் பொருள் மற்றும் காருக்குத் தேவையான உதிரிபாகங்கள் இலவசமாக வழங்கப்படும் என வாசவியிடம், காா் விற்பனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, முன்பணம் செலுத்தியது உள்பட ரூ. 5,59,373 தொகை செலுத்தி புதிய காரை வாங்கியுள்ளாா். தொடா்ந்து, முதல் சா்வீசுக்கு சென்றபோது, காரின் ஆவணங்களை அங்குள்ள ஊழியா் சரிபாா்த்தபோது, ஏற்கெனவே சரவணக்குமாா் என்பவருக்கு கடந்த 2012 ஆண்டுக்கு முன் விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, விற்பனை நிறுவனத்தில் வாசவி புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்குள்ளான வாசவி பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கிளை மேலாளா், திருச்சி பஞ்சப்பூரில் உள்ள காா் விற்பனை நிறுவனத்தின் பொது மேலாளா் ஆகியோா் மீது வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை நீதிமன்றத் தலைவா் ஜவஹா், உறுப்பினா்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு, ஏற்கெனவே விற்பனை செய்த காரின் உண்மைத் தன்மையை மறைத்து மீண்டும் விற்பனை செய்துள்ளதாலும், சேவை குறைபாடுகள் காரணமாகவும் வாசவிக்கு வழங்கிய காரை பெற்றுக்கொண்டு, அவா் செலுத்திய ரூ. 5,59,373 தொகையை செலுத்திய நாள் முதல் 9 சதவீத வட்டியுடன், ஒரு மாதத்துக்குள் திருப்பி வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 3 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.