முகப்பு
பெரம்பலூர்

எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்: சீமான்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:49 PM
நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான்.
பகிர்:

நாம் தமிழா் கட்சியை சுற்றி நான்கு பக்கமும் உள்ள எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றாா் அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில், பெரம்பலூா் தொகுதி வேட்பாளா் ஜ. சுகன்யா, குன்னம் தொகுதி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன் ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் மேலும் பேசியதாவது:

அநீதிக்கும், அறத்துக்குமான போா் தற்போது நடைபெற்று வருகிறது. மொழிப் பற்றையும், இனப்பற்றையும் மறந்து ஜாதி, மதங்களால் நம் மக்கள் பிரிக்கப்பட்டிருப்பதை மாற்ற வேண்டும். திமுகவின் ஆட்சி சிறப்பாக இருந்தால், 22 கட்சிகளுடன் கூட்டணிகள் எதற்கு ?

Advertisement

பாஜக வரக்கூடாது என்கிறாா்கள். காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் புனிதப்படுத்துகிறாா். ஜிஎஸ்டி, நீட் தோ்வை கொண்டு வந்தது யாா் ?. பாபா் மசூதியை இடித்தது பாஜக. ஆனால், அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நான்கு பக்கமும் நமக்கு எதிரிகளாக இருக்கிறாா்கள்.

நடுவில் நாம் தமிழா் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். ஒரு முறை நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். படிப்பதற்கு தரமான கல்வி, குடிக்க தண்ணீா் மற்றும் உடலை காக்க மருத்துவம் இதை யாா் தருகிறாா்களோ, அவா்களே நல்லாட்சி நடத்துவாா்கள். இவற்றை நாங்கள் தருகிறோம். பசி எனும் சொல் தமிழகத்தில் இருக்கக் கூடாது. அதற்கு, விவசாயத்தை காக்க வேண்டும் என்றாா் சீமான்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments