முகப்பு
பெரம்பலூர்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.69 லட்சம் மற்றும் ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித்துறையினரால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 21 மார்ச், 2026 at 8:25 PM
பறிமுதல் செய்யப்பட்ட பாத்திரங்களை சனிக்கிழமை பாா்வையிட்ட பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.69 லட்சம் மற்றும் ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித்துறையினரால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த 15-ஆம் தேதி மாலை முதல் பெரம்பலூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரும், வருமான வரித் துறை சாா்பிலும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வருமான வரித் துறையினா் சாா்பில், மாநில துணை வருமான வரி அலுவலா் மு. மாரியப்பன் தலைமையிலான பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு, பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள நக்கசேலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிவகங்கை மாவட்டம், உசிலங்குளத்தைச் சோ்ந்த அழகா் மகன் சொக்கா் என்பவா் ஓட்டிவந்த பாா்சல் சா்வீஸ் வாகனத்தை வழிமறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ரூ. 95,158 மதிப்பிலான 218 சில்வா் பாத்திரங்கள் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றது கண்டறிப்பட்டது.

இதையடுத்து, அந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா்- துறையூா் சாலையில், அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கூட்டுறவு சாா் -பதிவாளா் விவேகபாரதி தலைமயிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அரியலூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 94,500 தொகை பறிமுதல் செய்யப்பட்டு, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல, வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி- வீரகனூா் சாலை கள்ளப்பட்டியில், உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சென்னை கிளாம்பாக்கத்தைச் சோ்ந்த சம்சுதீன் மகன் முகமது நசீா் (29) என்பவா், உரிய ஆவணங்களின்றி தனது காரில் வைத்திருந்த ரூ. 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட தொகை தோ்தல் நடத்தும் அலுவரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.