கஜா புயல் பாதிக்கப்பட்ட புதுகை மாவட்ட மக்களுக்காக சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 30 டன் அரிசியை வெள்ளிக்கிழமை இரவு அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கலந்து கொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் மீட்புப் பணிப் பகுதிகளுக்கு அரிசி லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து உடனிருந்தார்.
பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூர் வருவாய் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 நிவாரணப்பொருள்கள் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது. கஜா புயலின் தாக்கத்தினால் திருக்களம்பூர் பகுதியிலும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. அதன்படி கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 நிவாரணப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வை.பழனிச்சாமி, கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜமாணிக்கம், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் ராம.சுப்பிரமணியன், நெ.ராமச்சந்திரன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.