புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 25ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, பறவை காவடியுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தீமித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து முக்கிய வீதகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்து நிலையை அடையச் செய்தனர். இதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.