மாணவர்களை குறிப்பிட்ட வட்டத்துக்குள் திணிக்கக் கூடாது'
மாணவர்களை குறிப்பிட்ட வட்டத்துக்குள் திணிக்கக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.
மாணவர்களை குறிப்பிட்ட வட்டத்துக்குள் திணிக்கக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.
அறந்தாங்கி அருகே குரும்பகாடு லாரல் கல்விக் குழுமம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி தங்க மோதிரம், கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியது: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இதனை விட்டால் மருத்துவர், பொறியாளராக வேண்டும் என்பது தான் பெற்றோர், மாணவர்களிடம் இருக்கிறது. அதனைத் தாண்டி பல்வேறு துறைகள் இருப்பதை யாரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. மத்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் 29 பணிகள் உள்ளன. இவை அனைத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் துறைகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. இவற்றை படித்தால் இந்திய அளவில் மாணவர்கள் சிறப்பிடம் பெற முடியும். மாணவர்களின் ஆர்வத்தை தெரிந்து உயர்கல்வியை பெற்றோர் தேர்வு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு விருப்பமில்லாத துறையில் அவர்களை கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது. எதனைப் படித்தாலும் மாணவர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். லாரல் கல்வி குழுமங்களின் தலைவர் கே.பாலசஞ்சீவி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரைப்பட நடிகை வடிவுக்கரசி, நடிகர் போஸ் வெங்கட், கலைத் துறையினரின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் பி.கோவிந்தசாமி வரவேற்றார்.
நர்சரி பள்ளி முதல்வர் ஞான.தனசேகரன் நன்றி கூறினார்.