பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது குறித்து...
மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சியின் தலைமை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 16 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஹரியாணாவில் பாஜக ஆதரவு பெற்ற சதீஷ் நந்தல் எனும் சுயட்ச்சை வேட்பாளருக்கு, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் தராம்பால் மாலிக் தலைமையிலான ஒழுங்குமுறைக் குழு, நரைங்கர் தொகுதியின் ஷேலி சவுத்ரி, சதௌராவின் ரேணு பாலா, ரதியாவின் ஜர்னைல் சிங், ஹாதினிலின் முகமது இஸ்ராயில் மற்றும் புன்ஹானாவின் முகமது இலியாஸ் ஆகியோரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
Advertisement
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கரம்வீர் சிங் பௌத்துக்கே வாக்களித்ததாகக் கூறி ரேணு பாலா, ஷேலி சவுத்ரி மற்றும் ஜர்னைல் சிங் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
மேலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 5 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக, ஹரியாணா காங்கிரஸ் தலைவர் ராவ் நரேந்தர் சிங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.