புயலால் வீடிழந்தவருக்கு முகநூல் குழுவினர் உதவி
கஜா புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு முகநூல் உறுப்பினர்களால் வீடு கட்டிக்
கஜா புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு முகநூல் உறுப்பினர்களால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அறந்தாங்கி அருகே நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் கடந்த மாதம் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பேஸ்புக் தர்ஹா என்கிற முகநூல் குழுவினரும் இக்றா அறக்கட்டளை என்ற அமைப்பும் இணைந்து பல லட்சத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
அப்போது அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு கிராமத்தில் பார்வையற்ற குடும்பத் தலைவர் ரெங்கசாமி, உடல் நலம் குன்றிய தாய், விபத்தில் தலையில் அடிபட்டு கை கால்கள் முழுமையாக இயங்காத மூத்த மகன். இவர்களைக் காப்பாற்ற 28 வயதாகியும் திருமணம் செய்யாமல் கூலி வேலை செய்யும் இளைய மகள்.
அதை விட பெரிய சோகம் அவர் வேலைபார்த்து வந்த கயறு தொழிற்சாலையும் புயலின் கோரதாண்டவத்தால் இருந்த இடம் தெரியாமல் போனதால் அந்த வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டது. இக்குடும்பத்தில் நிலையறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா மற்றும் அதே ஊரைச்சேர்ந்த தோழர் மலைமுருகன் உள்ளிட்டோர் முகநூல் குழுவினரிடம் கூறி உதவி கேட்டனர்.
அதன் பேரில் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ராஜா முகமது சிதிலமடைந்த கூரை வீட்டை படமெடுத்து நண்பர்கள் காணொலி ஆதாரத்துடன் பதிவு செய்தவுடன் அவர்கள் அனுப்பிய ரூ. 1.50 லட்சத்தில் வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
முற்றிலும் சுற்றுச்சுவர் வைத்த ஓட்டுவீடு கட்டிக் கொடுக்கப்பட்டு மீதமிருந்த பணத்தில் மேலும் அவர்களுக்கு துணிகள், பீரோவையும் பேஸ் புக் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் அமினா முகம்மது, ரெஜினா ராணி உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் வழங்கினர்.
எங்கள் பெயர் எதுவும் வேண்டாம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்ததையே பெரிதாக நினைக்கின்றோம் என்றனர் அந்த முகநூல் நண்பர்கள் குழுவினர்.