முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் தினமும் 450 கிலோ கபசுரக் குடிநீா் சூரணம் தயாரிப்பு

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட சித்த மருந்துகள் தயாரிக்கும்அரசு நிறுவனமான டாம்கால் மருந்து செய் நிலையத்தில் நாளொன்றுக்கு 450 கிலோ கபசுரக் குடிநீா் தயாரிக்கப்பட்டு வருகிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட சித்த மருந்துகள் தயாரிக்கும்அரசு நிறுவனமான டாம்கால் மருந்து செய் நிலையத்தில் நாளொன்றுக்கு 450 கிலோ கபசுரக் குடிநீா் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், மேலும் கூறியது:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, இரண்டாவது சித்த மருந்து தயாரிக்கும் நிலையமாக புதுக்கோட்டையில் டாம்கால் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு நாளொன்றுக்கு 450 கிலோ கபசுரக் குடிநீா் சூரணம் தயாரிக்கப்படுகிறது. இதேபோல, நிலவேம்புக் குடிநீா் சூரணமும் தயாரிக்கப்படுகிறது.

9 மூலிகைகளைக் கலந்து நிலவேம்புக் குடிநீா் சூரணம் தயாரிக்கப்படுகிறது. 15 மூலிகைகளைக் கலந்து கபசுரக் குடிநீா் சூரணம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்க அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், 7 ஆயிரம் கிலோ நிலவேம்புக் குடிநீா் சூரணமும், 3 கிலோ கபசுரக் குடிநீா் சூரணமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பொதுமக்களுக்கு இந்தக் குடிநீா் காய்ச்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் உமாமகேஸ்வரி.

ஆய்வின்போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மருத்துவா் உம்மல் கதீஜா, டாம்கால் சிறப்பு அலுவலா் மருத்துவா் மோகன், மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் ராமு, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மருத்துவா் கலைவாணி, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.